புதன், 21 ஜூலை, 2010

இவனும் இவளும் -4

என் கவிதைகளின் 
முதல் வாசகனாகும் அவனுக்கு 
ஒவ்வொரு கவிதையுடனும் தருவேன் 
முத்தமொன்றையும்..

என் சுவாசித்தலின்
வேறுபாடுணர்ந்து நடந்து கொள்ளும்
அவனுக்கு இரவுகளில் இதயத்தை
உழச் செய்வேன்..

என் கூந்தலின் வாசம் நுகரும் அவனுக்கு
என் நேசத்தின் எல்லையற்ற வெளிகளில்
உலவ அனுமதிப்பேன்
இன்னும் விளையாடவும்..

என் தாகமுணர்ந்து ஸ்பரிசிக்கும்
அவனுக்கு
என் தொட்டிச் செடிகளில்
தினமும் பூக்கும் பூக்களை பரிசளிப்பேன்..
அத்துடன் என் செவ்விதழையும்..

எப்போதேனும் ஒரு மழை நாளில்
இதம் சேர்க்க
இளஞ்சூடான தேநீர்
தயாரித்துத் தருவேன்..
கூடவே என் தேகத்தையும்..

என்னை ரசிப்பவனுக்கு
என்னை மட்டுமே ரசிப்பவனுக்கு
பகிர்ந்தளிப்பேன்..
என் காதலின் கடைசிச் சொட்டு
தீரும்  வரை... 

அவன் அவனாக வரும் வரை
நீட்டித்திருப்பேன்
என் ஆயுளையும் ஆசையையும் ..

எல்லோருக்குமான ஒருவன்
எனக்கானவனாக   
இருக்க முடியாது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக