வெள்ளி, 10 டிசம்பர், 2010

கடவுள் ஒரு யாசகன்

என்ன நேர்ந்தது உனக்கு 

இப்படி நடுவீதியில் நின்று 
யாரைப் பற்றியும் கவலைப்படாமல் 
கண்ணீரை பொலபொலவென சிந்தி 
பிறருக்கு உற்று கவனித்தாலொழிய 
புரியாத வார்த்தைகளை 
உதிர்த்து கொண்டிருக்கிறாய் 
அந்த தொப்பைவயிறு படைத்தவனிடம்.. 

உன் கண்ணீருக்கு தேற்றும் விதமாய் 
தன் தும்பிக்கையையேனும் 
அசைத்ததா அந்த கடவுள்? 

உன் வார்த்தைகளை செவிமடுத்ததாய் 
தன் முறம் போன்ற காதுகளையேனும் 
விசிறியதா? 

எந்த நம்பிக்கை உன்னை 
அந்த கடவுளிடம் அழைத்து செல்கிறது? 
அதில் சிறு அளவையேனும் 
உன்னிடத்தில் வை.. 

கடவுள் ஒரு யாசகன் 
யாசகன் ஒரு மனிதன் 
மனிதன் ஒரு கடவுள்

எப்படி

இப்படி 
இது நடந்தால் 
எப்படி இருக்குமெனும் 
எதிர்பார்ப்புடன் 
செல்லும் போது 
அதற்கு நேர்மாறாக 
நடந்தால் 
அப்படி வலிக்கிறது 
என்பதை 
எப்படி புரிய வைப்பது? 
இப்படி செய்பவர்களுக்கு.

முரண்கள்



உன்னிடம் 
சண்டை போடும் போது
சமாதானத்திற்கு 
வெள்ளைச் சிரிப்பை
ஏந்தி வருகிறாய்

கோபப்படும் போது
சமரச வார்த்தைகள்
பேச துணிகிறாய்

சமாதானமும்
சமரசமும் உனக்கானவை
கோபமும்
சண்டையும் எனக்கானவை
நம்மை 
இணைப்பது 
இந்த முரண்கள்தான்.
 

பாவனை



காத்திருந்து காத்திருந்து 
தூங்கிக் கிடக்கிறதென் 
புலன்கள்..
தாமதித்து
வீடு திரும்பி 
தூங்கட்டுமென 
எழுப்பாமல் விடுகிறாய்.. 
உன் வாசனையுணர்ந்து
விழித்துக் கொண்டயென் உறக்கம்
நீ எழுப்ப வேண்டுமென
பாவனை செய்து புரள
சற்று நேரம் கடந்து 
உன்னிலிருந்து வெளியேறியது
என் உணர்வுகளை மிதித்தபடி
உன் குறட்டையொலி..

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இவனும் இவளும் - 11

மனசு

சமையல் எரிவாயு
தீர்ந்துவிட்ட நாளொன்றில் 
உணவு வேளையில் 
பசியாற ஏதுமின்றி 
இரு ரொட்டித்துண்டுகளை
கையில் வைத்து 
பேசிக் கொண்டிருந்தோம்..
கொஞ்சம் கொஞ்சமாய்
நிறைய ஆரம்பித்தது 
மனசு..

இவனும் இவளும் - 10

நடுநிசி அழைப்பு 
நள்ளிரவில் 
யாரிடமிருந்தோ
அழைப்பு வர 
நெடுநேரம் பேசிக்
கொண்டிருந்தாய்.. 
என்ன ஏதென்று 
கேட்ட போதும் 
நெடுநாளாக பேசாத 
ஒரு நட்பிடம்
பேசுவதாக சொல்லிவிட்டு
தொடர்ந்து பேசினாய்.. 
எனக்கான நேரத்தை
விழுங்கியபடியிருக்கும்
அந்த அழைப்பின் மீது
வெறுப்பு பரவுகிறது.. 
‘என்னதான் தலைபோகிற 
அவசரம் 
அதுவும் நள்ளிரவில்..’
மனதுக்குள் மருகியபடி
நள்ளிரவில் 
தொலைபேசுபவர்களை 
மன்னிக்க முடியாமல்
தத்தளிக்கிறதென் நேசம்..

இவனும் இவளும் - 9

முரண்கள்

உன்னிடம் 
சண்டை போடும் போது
சமாதானத்திற்கு 
வெள்ளைச் சிரிப்பை
ஏந்தி வருகிறாய்

கோபப்படும் போது
சமரச வார்த்தைகள்
பேச துணிகிறாய்

சமாதானமும்
சமரசமும் உனக்கானவை
கோபமும்
சண்டையும் எனக்கானவை
நம்மை 
இணைப்பது 
இந்த முரண்கள்தான்.