புதன், 21 ஜூலை, 2010

இவனும் இவளும் - 5

குறுந்தாடி குத்துகிறதென 
முத்தமிட தடுக்க 
முகச்சவரம் செய்து வந்தாய்.. 
ஆங்காங்கே ஆறேழு 
இடங்களில் ரத்தம் கசிய 
முத்தமிட்டேன் 
கண்ணீருடன் 
உன் காயங்களில் ... 
பின்னும் 
அழுது கொண்டே இருந்தேன் 
சிறுகத்தியிலேற்பட்ட 
காயத்திற்கு 
முத்தத்தாலான 
காயமே மேலென...
-------------------------
இரவுகளில் 
வரும் சிறு மரணத்தின் போது 
என் குணமறிந்து
நடக்கத் தவறுமுன் நேசம்
வித்திடுகிறது
மீளா பெருந்துயருக்கான 
பாதையொன்றை.. 
--------------------
உன்னை
வெறுப்பதாக 
சொல்லுமென்
சொற்களில் நிழலாய்
நகர்வது
உன் மீதான அதீத விருப்பமே..
----------------

இவனும் இவளும் -4

என் கவிதைகளின் 
முதல் வாசகனாகும் அவனுக்கு 
ஒவ்வொரு கவிதையுடனும் தருவேன் 
முத்தமொன்றையும்..

என் சுவாசித்தலின்
வேறுபாடுணர்ந்து நடந்து கொள்ளும்
அவனுக்கு இரவுகளில் இதயத்தை
உழச் செய்வேன்..

என் கூந்தலின் வாசம் நுகரும் அவனுக்கு
என் நேசத்தின் எல்லையற்ற வெளிகளில்
உலவ அனுமதிப்பேன்
இன்னும் விளையாடவும்..

என் தாகமுணர்ந்து ஸ்பரிசிக்கும்
அவனுக்கு
என் தொட்டிச் செடிகளில்
தினமும் பூக்கும் பூக்களை பரிசளிப்பேன்..
அத்துடன் என் செவ்விதழையும்..

எப்போதேனும் ஒரு மழை நாளில்
இதம் சேர்க்க
இளஞ்சூடான தேநீர்
தயாரித்துத் தருவேன்..
கூடவே என் தேகத்தையும்..

என்னை ரசிப்பவனுக்கு
என்னை மட்டுமே ரசிப்பவனுக்கு
பகிர்ந்தளிப்பேன்..
என் காதலின் கடைசிச் சொட்டு
தீரும்  வரை... 

அவன் அவனாக வரும் வரை
நீட்டித்திருப்பேன்
என் ஆயுளையும் ஆசையையும் ..

எல்லோருக்குமான ஒருவன்
எனக்கானவனாக   
இருக்க முடியாது..

இவளும் இவனும் -3

அன்பின் அடையாளம் 

அன்று 
உனக்கு ஜலதோஷம் 
பிடித்த போது 
விறலி மஞ்சளைச் சுட்டு 
சுவாசிக்க அறிவுறுத்தினேன்.

அதையே 
எனக்கொருமுறை
பரிந்துரைத்து
மஞ்சளைத் தந்தாய்

அதைச் சுட்டு 
கரியாக்கிவிடாமல் 
பத்திரப்படுத்துகிறேன்..
வேறொரு மஞ்சளை 
வாங்கி தீயில் சுட்டு 
சுவாசித்தேன். 

நீ கொடுக்கும் எதையும் 
தீக்கிரையாக்க மாட்டேன்.. 
அதன் அடையாளங்களை
இழந்து விடாமல் 
பாதுகாக்கிறேன்..
அவை உன் அன்பின் 
அடையாளமாயிருப்பதால்.

இவனும் இவளும் - 2


ஒவ்வொருமுறையும் 
நீ என்னை நேசிக்கிறாயாவென
சந்தேகத்துடன் 
கேட்பதில்லை.. 
சந்தோஷத்துடன் தான் 
கேட்கிறேன்..
நீ சொல்லும் 
இப்போதைய ஆமோதிப்புகளையும் 
மறுதலிப்புகளையும் 
மட்டுமல்ல..
முன்னால் 
உன்னால் 
ஒப்புக்கொள்ளப்பட்ட 
எல்லா வார்த்தைகளையும்   
சேர்த்தே கணக்கில் 
எடுத்துக் கொள்கிறேன்.. 
ஆயினும் அவ்வப்போது 
எனை உயிர்ப்பிப்பது 
நீ முன்னர் தூவிய 
அந்த ஒற்றை வார்த்தையே 

இவளும் இவனும் - 1


தொலைபேசியில்
நீயும் நானும்
மணிக்கணக்காகப் பேசிய 
பேச்சுக்கள் 
இனி குறைந்து போகலாம்..

இன்று என்ன உடை
அணிந்திருக்கிறாயென
இருவரும் கேட்டுக் கொள்ளும்
வாய்ப்பில்லாமல் போகலாம்..

என்ன சாப்பிட்டாயென
உணவுவேளை தோறும் 
விசாரிக்கும் நிலை
வேறாகலாம்..

எப்போது 
சந்திப்போமென
அதி ஆவலுடன்
காத்திருந்த 
வலியும் சுகமும் மாறிப் போகலாம்..

ஒற்றைக் காட்சியை 
நீ வேறிடத்திலும்
நான் வேறிடத்திலும் 
நின்று சிலாகித்த 
சிலீர் அனுபவங்களின்
களம் மாறலாம்..

உன் வீட்டில் நீயும்
என் வீட்டில் நானும்
தனித்திருக்கையில்
நமக்கிடையே நிகழ்ந்த 
சந்தோஷங்கள் வேறாய் மாறாலாம்..
வலிகள் சந்தோஷமாய் மாறலாம்..
இன்னும் சில நாட்களில் 
நிகழவிருக்கும் நமது 
திருமணத்திற்கு பிறகு.